வயலுார் கிராமத்தில் கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டுகோள்
சித்தாமூர்: போந்துார் ஊராட்சியிலுள்ள வயலுார் கிராமத்தில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, கால்வாய் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சித்தாமூர் அடுத்த போந்துார் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட வயலுார் கிராமத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால், தெரு குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்குகிறது. மேலும், சாலையோரத்தில் கழிவுநீர் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, இரவு நேரத்தில் கொசுக்கடியால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, வயலுார் கிராமத்தில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.