எலப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த எலப்பாக்கத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, எலப்பாக்கம் ஊராட்சி உள்ளது.இங்குள்ள பிண்ணம்பூண்டி, ஆர்.சி.காலனி, எலப்பாக்கம், அருந்ததியர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், இடித்து அகற்றப்பட்டது.புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட வலியுறுத்தி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, சந்தை வளாகத்தில் உள்ள நுாலக கட்டடத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.எனவே, எலப்பாக்கத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.