வண்டலுார் சாலை தடுப்புச்சுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு:வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், தடுப்புச் சுவரின் உயரத்தை உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வண்டலுார் - கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில், சாலையின் மையப் பகுதியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது.இச்சாலையில், அரசு பேருந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இங்கு, சாலையின் தடுப்புச் சுவர் உயரம் குறைவாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இதனால், கடந்த சில மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.இந்த விபத்தை தவிர்க்க, சாலையின் தடுப்புச் சுவர் உயரத்தை உயர்த்த வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வண்டலுார் காவல் துணை கமிஷனர் பேசும் போது, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், சாலையின் தடுப்பு உயரம் குறைவாக உள்ளதால், விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.இதனால், சாலை தடுப்பு உயத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் இணைந்து கூட்டாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.