செங்கை அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில், 1,700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன. இதனால், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மருத்துவமனையில், நோயாளிகளை பார்க்க வருவோரில் சிலர் குடிபோதையில் வரும் போது, டாக்டர்களிடம் தகராறு செய்து, அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. மருத்துவர்கள், ஊழியர்களின் பணம், மொபைல் போன்களும் திருடப்படுகின்றன. இதுபோன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க, மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் தனியாக அமைக்க வேண்டும் என, எஸ்.பி., சாய் பிரணீத்திடம், மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியது. அதன் பின், கடந்தாண்டு மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்த எஸ்.பி., சாய் பிரணீத், அங்கு தனியாக புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என, தெரிவித்தார். ஆனால், இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் நலன் கருதி, மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.