தடுப்பு சுவர் உடைந்து பாழடைந்த கிணற்றால் விபத்து அபாயம்
திருப்போரூர், கொட்டமேடு கிராமத்தில், சாலையோரத்தில் அபாய நிலையிலுள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்தில், கொட்டமேடு - கூடுவாஞ்சேரி செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது. இதில் தண்ணீர் இல்லாமல், ஒரு பக்கம் தடுப்புச் சுவர் உடைந்து, கிணறும் பயன்பாடின்றி உள்ளது. இதன் எதிர் திசையில் குடியிருப்புகள், வணிக கடைகள், டாஸ்மாக் கடை ஆகியவை உள்ளன. கிணற்றின் அருகே செல்பவர்கள், அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் கூட ஒருவர், மதுபோதையில் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தற்போது, கிணற்றுக்குள் குப்பையும் நிறைந்துள்ளதால், இதன் மூலமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பில்லாத பாழடைந்த கிணற்றை மூட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.