சென்னை 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.8,445 கோடி ஒதுக்கீடு
சென்னை, மத்திய பட்ஜெட்டில், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 8,445 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள விபரம், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.சென்னையில் மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்துக்கு 63,246 கோடி ரூபாயில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு, சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதா; இல்லையா என்ற விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் வாயிலாக, நிதி ஒதுக்கீடு விபரம் தெரிய வந்துள்ளது.சமீபத்திய மத்திய பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, 8,445 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோல், டில்லி - 5,434 கோடி ரூபாய், பாட்னா - 3,165 கோடி ரூபாய், பெங்களூரு - 2,217 கோடி ரூபாய், மெட்ரோ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மஹாராஸ்டிராவில் மும்பை உட்பட நான்கு இடங்களுக்கு நடக்கும், மெட்ரோ திட்டத்துக்கு, 4,836 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த, சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 8,445 கோடி ரூபாய் ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. இது, நாட்டில் நடக்கும், மொத்த மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியில், 26.6 சதவீதம்.மற்ற நகரங்களில் நடக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, விமான நிலையம் - கிளாம்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் அளித்து, தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.