சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு ஏழு ஆண்டு சிறை
செங்கல்பட்டு:சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை, தாம்பரம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பெற்றோருடன், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 2021 மார்ச் 25ம் தேதி வீட்டின் அருகில் உள்ள, கடைக்கு பிரட் வாங்க சிறுமி சென்றார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த, அரவிந்தன், 29 என்பவர், சிறுமியை பின் தொடர்ந்து கடத்திச்சென்று, அடுக்குமாடி குடியிருப்பு முதல் மாடியில், வைத்து பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் தாம்பரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அரவிந்தனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப் பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.