உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை தசரா விழாவில் அம்மனுக்கு சரஸ்வதி பூஜையன்று சிறப்பு அலங்காரம்

செங்கை தசரா விழாவில் அம்மனுக்கு சரஸ்வதி பூஜையன்று சிறப்பு அலங்காரம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் துவங்கியுள்ள தசரா விழாவில், அக்., 1ம் தேதி சரஸ்வதி பூஜையன்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. செங்கல்பட்டில், நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, நவராத்திரி விழாவின் போது தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தசரா விழாவையொட்டி சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன்கோவில், ஓசூரம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில், அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். இவ்விழா, கடந்த 23ம் தேதி துவங்கி, வரும் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில், தினமும் அம்மனுக்கு வெவ்வேறு மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்வர். அக்., 1ம் தேதி சரஸ்வதி பூஜை நாளில், சரஸ்வதி போன்று அலங்காரம் செய்யப்படும். வரும் அக்., 2ம் தேதி விஜயதசமியையொட்டி, அம்மன் சிலைகளுக்கு துர்கா வேடமிட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க வாகனங்களில் வீதியுலா நடைபெறும். அதன் பின் நள்ளிரவில், அனுமந்தபுத்தேரி அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், சூரசம்ஹாரத்தின் போது வன்னி மரத்தில் அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவிற்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். விழாவையொட்டி சிறிய, பெரிய ராட்டினங்கள், பொழுதுபோக்கு விளையாட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு நகர போலீசார் 100 பேர், தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !