8ம் தேதி கந்தசுவாமி கோவிலில் வசந்தகால உத்சவம் துவக்கம்
திருப்போரூர்:திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், சித்திரை மாத வசந்த உத்சவ விழா வரும் 8ம் தேதி துவங்குகிறது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில், வசந்த உத்சவ விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான விழா வரும் 8 ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள, வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகளும் நடைபெற்று, மீண்டும் கோவிலை வந்தடைவார். விழாவின் இறுதி நாளான 12 ம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.