உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நிறைவு
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நிறைவு நிகழ்வு, மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் அபர்ணா மற்றும் நகராட்சி தலைவர் மலர்விழி தலைமையில், நடந்தது. மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வந்தது. இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு, நகராட்சி துறை உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன. வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை மக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். முகாமின் நிறைவு நாளான நேற்று 19, 20 மற்றும் 21வது வார்டு மக்கள், 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மனுக்கள் அளித்தனர். இதில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.