திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளம் கனமழைக்கும் நிரம்பாத அவலம்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் கனமழை பெய்தும், சங்கு தீர்த்தகுளம் முழுமையாக நிரம்பாமல் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் புனித தீர்த்தமாக, சங்கு தீர்த்தகுளம் விளங்குகிறது. வேதகிரீஸ்வரரை வழிபட்ட மார்கண்டேய முனிவர், இக்குளத்தில் தோன்றிய சங்கில் குளத்து நீரை நிரப்பி, சுவாமிக்கு அபிஷேகம் செய்ததாக, தல வரலாறு கூறுகிறது.தற்காலத்திலும், குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என, சங்கு தோன்றுகிறது. கடந்த மார்ச் 7ம் தேதி புனித சங்கு தோன்றியது குறிப்பிடத்தக்கது.வேதகிரீஸ்வரர் கோவில் மலை குன்று, காக்கை குன்று மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பெருக்கெடுக்கும் மழைநீர், இக்குளத்தை அடைய கால்வாய்கள் உள்ளன.அவை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கி, குறுகியுள்ளன. காவல் நிலையம் அருகில், கால்வாய் துார்க்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், கடந்த 11ம் தேதி 4.5 செ.மீ., 12ம் தேதி 7 செ.மீ., என கனமழை பெய்தும், குளம் முழுதுமாக நிரம்பாமல் உள்ளது.எனவே, கோவில் மலைக்குன்று உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை துார்வாரி பராமரிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்கவும், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.