உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயனாளிகளுக்கு வழங்கப்படும் கம்பிகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கம்பிகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளை திறந்தவெளியில் வைத்துள்ளதால், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன. அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 59 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டம், கனவு இல்லம் திட்டங்களின் கீழ், ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அரசு சார்பில் கட்டித் தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை மூலமாக இரும்பு கம்பிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்குத் தேவையான இரும்பு கம்பிகள், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கம்பிகள், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், திறந்தவெளியில், மண் தரையில் வைக்கப்பட்டு உள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தால், திறந்தவெளியில் உள்ள இந்த கம்பிகள், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இந்த கம்பிகளை பயன்படுத்தி பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும். எனவே, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளை, மழையில் நனையாதபடி பாதுகாப்பாக வைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை