உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பொங்கல் கொண்டாட புறப்பட்டோர்...8.50 லட்சம்!:பிரதான சாலைகளில் வாகன நெரிசல்

 பொங்கல் கொண்டாட புறப்பட்டோர்...8.50 லட்சம்!:பிரதான சாலைகளில் வாகன நெரிசல்

சென்னை:பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, சென்னையில் இருந்து இரண்டாவது நாளாக நேற்று, லட்சக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர்.பயணியர் கூட்டத்திற்கு ஏற்ப, பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் வரிசைப்படுத்தி இயக்கி வருகின்றனர்.திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில், பேருந்து நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர்.அரசு, தனியார் பேருந்துகள், கார் போன்ற சொந்த வாகனங்கள் என, ஒரே நேரத்தில் நேற்று திரண்டு சென்றதால், சென்னையில் முக்கிய நுழைவு பகுதிகளான ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள், விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்து அனைத்து போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளும், கோயம்பேடில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்துகள் எங்கிருந்து கிளம்புகின்றன என தெரியாமல், பயணியர் குழப்பம் அடைந்தனர்.இதனால் அவர்கள், கோயம்பேடுக்கு வந்து தகவல் மையத்தில் கேட்டு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். முன்பதிவு செய்த பயணியரே பெரும்பாலும் அவதிக்குள்ளாகினர்.பயணியர் கூறியதாவது:முன்பதிவு செய்த பயணியரை, நடத்துனர்கள் மொபைல் போனில் அழைத்து, கிளாம்பாக்கம் வருமாறு அழைக்கின்றனர். கோயம்பேடில் இருந்து பேருந்துகள் புறப்பட்டாலும், கிளாம்பாக்கமே வரச்சொல்வதால், கோயம்பேடு வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல வீண் அலைச்சல் ஏற்படுகிறது.பொங்கல் கடைசி நேரத்தில் இந்த மாற்றங்கள் செய்ததால், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் வீண் தகராறு ஏற்படுகிறது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகரின் பிரதான பகுதிகளுக்கு, மாநகர சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல இரண்டு பேருந்துகள் மாறி சென்றாலே, 60 ரூபாய் கட்டணம் ஆகி விடுகிறது. இத்தடங்களில் சாதாரண கட்டண பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவதால், கோயம்பேடில் நெரிசல் குறைந்துள்ளது. பயணியர் கூட்டத்தை பொறுத்து, கூடுதலாக பேருந்துகளை இயக்க உள்ளோம்' என்றனர்.அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்களில் இருந்து என, கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 8.50 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அரசு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பேருந்துகள் இயக்கம், குறைபாடு குறித்து பயணியரிடம் கேட்டறிந்தார்.

அரசு பேருந்து 2,100

சிறப்பு பேருந்து 1,904-அரசு பேருந்துகளில் 4.50 லட்சம்ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்

பேருந்து நிலையம் பேருந்துகள் இயக்கம்மாதவரம் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம் வழி ஆந்திராகே.கே.நகர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, சிதம்பரம்தாம்பரம் ரயில் நிலையம் காஞ்சிபுரம், வேலுார், ஆரணி வழி ஒரகடம்சானட்டோரியம் கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி வழி விக்கிரவாண்டிகோயம்பேடு திருவண்ணாமலை, வந்தவாசி, வடலுார், சிதம்பரம், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மயிலாதுறைகிளாம்பாக்கம் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்துார், நாகர்கோவில், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ராமேஸ்வரம், சேலம், கோவை, எர்ணாகுளம் செல்லும் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள்.

தாமதம்

கன்னியாகுமரி செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தேன். இங்கிருப்பவை முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் என்பதால், 'சீட்' கிடைக்காமல் தவித்தேன். பின், ஒரு பேருந்தில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது. 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.- ராமகிருஷ்ணன், 46,கிளாம்பாக்கம்.

தலைமை நிர்வாக அலுவலர் நியமனம்

கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்கள் மேலாண்மை தலைமை நிர்வாக அலுவலராக, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்பு, சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது அயல் பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான உத்தரவுகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் வெளியிடப்படும். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ