ஓடும் பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு
அச்சிறுபாக்கம்: திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்ச பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன், 48. இவர், அரசு போக்குவரத்து கழகத்தில், சென்னை பல்லவன் சாலையில் உள்ள அலுவலகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். விஜயன் நேற்று விழுப்புரத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் செல்லும் பேருந்தில், டிக்கெட் பரிசோதனை செய்யும் பணியில் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் அருகே சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டு விஜயன் மயங்கி விழுந்தார். அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்க சாவடி பகுதியில் ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர்கள் விஜயனை பரிசோதித்த போது விஜயன் உயிரிழந்தது தெரிந்தது. அவரது உடல் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சிறுபாக்கம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.