யு.பி.எஸ்.இ., தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட, மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணி போட்டித் தேர்வில் பங்கேற்க, ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் 20 பேருக்கு, இந்திய குடிமை பணிகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க, ஆயத்த பயிற்சியை வழங்கி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்களுக்கு, இந்த பயிற்சி அ ளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சிபெற விரும்புவோர், www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை சின்ன நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 044- 24494247 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.