பைக்குகள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; ஒருவர் படுகாயம்
மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 46. அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன், 40, என்பவருடன், நேற்று முன்தினம் ஆத்துார் பழத்தோட்டம் நோக்கி, தனது 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் சென்றார். இருசக்கர வாகனத்தை குணசேகரன் ஓட்டினார். காவூர் பாலாற்று மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த காவூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன், 36, என்பவரின் 'பஜாஜ் பல்சர்' பைக், குணசேகரனின் பைக் மீது வேகமாக மோதியது.இதில் படுகாயமடைந்த குணசேகரன், ஆனந்தன் இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மயக்கமடைந்த கண்ணனை, சக வாகன ஓட்டிகள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.