நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
பவுஞ்சூர், பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் பகுதியில் மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இது நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு, பெரும்பாக்கம் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான பேருந்து நிறுத்தமாக உள்ளது.சென்னை, புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவியர் என, தினசரி ஏராளமான மக்கள் நெல்வாய்பாளையம் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிழற்குடை பராமரிப்பு இன்றி பழுதடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால் வெயில் காலத்தில் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது கால்வலி, மயக்கம் ஏற்படுவதாக கூறுகின்றனர். மழை காலத்தில் மழையில் நனைந்தபடி பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நெல்வாய்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.