நாவலுார் சர்தார் படேல் தெரு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? நாவலுார் கிராமத்தினர் வேண்டுகோள்
திருப்போரூர்: நாவலுார் ஊராட்சியிலுள்ள சர்தார் படேல் தெருவில், வேகத்தடை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், நாவலுார் ஊராட்சியில் அடங்கிய சர்தார் படேல் தெருவில் வீடுகள், வணிக கடைகள் அதிக அளவில் உள்ளன. இத்தெரு சாலை வழியாக, அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அடிக்கடி சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில், இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த சாலையில், பள்ளி வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள், வணிக கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு சாலைக்கு வருவோர், திடீரென வாகனங்கள் வருவதால் அச்சமடைகின்றனர். சி று விபத்துகளும் நடந்து வருகின்றன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.