சாமியார்கேட் ரயில் கடவுப்பாதையில் சேதமான சாலை சீரமைக்கப்படுமா?
மறைமலை நகர்:மறைமலை நகர் - ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், சாமியார் கேட் பகுதியில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவுப்பாதை, தண்டவாளங்கள் செல்லும் பகுதியில் சாலை பெயர்ந்து, ஜல்லிக்கற்கள் வெளியே வந்துள்ளன. அவை, வாகனங்களின் டயர்களில் குத்தி பஞ்சராகின்றன.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:ரயில்வே கடவுப்பாதையை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. இந்த பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டிய சூழல் உள்ளது.அதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், இரவில் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே, இந்த பள்ளங்களை சீரமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.