குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுது நீக்கப்படுமா?
மறைமலை நகர்,மறைமலை நகர், பராசக்தி நகர் பகுதியில், பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி, 20வது வார்டு, பராசக்தி நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, இதே பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, 2016ம் ஆண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சுத்திகரிப்பு நிலையம் பழுதாகி, பல ஆண்டுகளாக வீணாகி வருகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது: இந்த சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து, பல ஆண்டுகளாக வீணாகி வந்தது. கடந்தாண்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், ஒரு முறை பழுது நீக்கினர். அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் பழுது ஏற்பட்டு, சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக, வெளியில் அதிக பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை தொடர்கிறது. எனவே, இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.