ஊராட்சிக்கு புது கட்டடம் கல்பட்டில் பணி துவக்கம்
சித்தாமூர் :கல்பட்டு ஊராட்சியில், 20 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற கட்டடம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய கட்டடம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது.சித்தாமூர் அருகே கல்பட்டு மற்றும் பனையடிவாக்கம் கிராமங்களை உள்ளடக்கிய, கல்பட்டு ஊராட்சி உள்ளது.இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை அருகே, 50 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், 2002ம் ஆண்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.ஆனாலும், மன்ற கூட்டங்கள் நடத்தவும், சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இட வசதியின்றி 20 ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.தற்போது 2024 - 25ம் நிதியாண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 31.29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.