குழந்தைகள் தினத்தில் யோகா உலக சாதனை
கும்மிடிப்பூண்டி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் 30 பேர், உலக சாதனைக்காக தொடர்ந்து நான்கு நிமிடங்கள் விருட்சாசனம் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பஜார் பகுதியில், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களின் யோகா உலக சாதனை நிகழ்வு நடந்தது. பள்ளி மாணவர்கள் 30 பேர், ஒரே நேரத்தில் நான்கு நிமிடங்கள் விருட்சாசனம் செய்தனர். இவர்களது சாதனை, 'கிங்டம்' உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. பள்ளி தாளாளர் மணி, முதல்வர் மோகன்ராஜ், உலக சாதனை தீர்ப்பாளர் செல்வராஜ், யோகா ஆசிரியர் பிரவீன்குமார் ஆகியோர், சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.