| ADDED : ஜூலை 09, 2024 12:21 AM
மாதவரம், மாதவரம் பொன்னியம்மன்மேடு 200 அடி சாலை ஜவஹர்லால் நேரு தெருவில், புழலைச் சேர்ந்த அய்யனார்,30 என்பவருக்கு சொந்தமான, பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் கிடங்கு அமைந்துள்ள பகுதியில் மேலே செல்லும் உயரழுத்த மின்சார கேபிளில் உராய்வு ஏற்பட்டு, கேபிள் துண்டித்து கீழே கிடங்கில் விழுந்தது. அதிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு, கிடங்கின் வெளியே உள்ள அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் மளமளவென்று தீ பற்றி எரியத் தொடங்கியது.அக்கம் பக்கத்தவர்கள் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம், செங்குன்றம், கொளத்துார் தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கிடங்கின் அருகில் ஏ.டி.எம்., மையம் இருந்தது. அங்கிருந்த இயந்திரத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.