சென்னை,தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தி.நகரில் சி.ஐ.டி., நகர், போக் சாலை, சாதுால்லா சாலை, வ.உ.சி., தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரித்தார்.அப்போது, அவர் பேசியதாவது:கடந்த மூன்று நாட்களாக ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம், மக்களின் வரவேற்பு அதிகம் கிடைத்துள்ளது. எனவே, தி.மு.க., கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.கடந்த 2019 முதல் 2024 வரை, தொகுதி முழுதும் ஆய்வு செய்துள்ளேன். ரயில்வே சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அளித்துள்ளேன்.அதன் பயனாக, மாம்பலம், சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் பழுதடைந்திருந்த கூரை மாற்றப்பட்டது. தரமணி ரயில் நிலைய சாலையில் 1.68 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் ரயில் நிலையத்தில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.வேளச்சேரி - புனித தோமையர் மலை எம்.ஆர்.டி.எஸ்., இணைப்பிற்காக, நிலம் எடுக்கப்பட்டு பணி விரைவில் நடக்க உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.