| ADDED : ஜூன் 02, 2024 12:20 AM
கோடம்பாக்கம்,சென்னை மாநகரின், பிரதான சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலை, போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இதன் வழியாக தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.கோடம்பாக்கம் - போரூர் ஆற்காடு சாலையில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்கின்றன. இதற்காக, இச்சாலையின் நடுவே ராட்சத துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனை அருகே, நேற்று காலை, திடீரென சாலை உள்வாங்கியது. 7 அடி ஆழத்திலும் 6 அடி அகலத்திலும் பள்ளம் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை சீர் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ ரயில் அதிகாரிகள், பள்ளம் ஏற்பட்ட பகுதியை பொக்லைன் இயந்திரத்தால் தோண்டி, சிமென்ட் கலவை கொட்டி சீரமைத்தனர்.ராட்சத இயந்திரங்கள் வைத்து மெட்ரோ பணி நடப்பதால், அதனால் ஏற்பட்ட அதிர்வில் பள்ளம் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.மெட்ரோ ரயில் பணியின்போது, ஆற்காடு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் சரியாக மூடாததால், வாகன போக்குவரத்து காரணமாக அதிர்வு ஏற்பட்டு பள்ளம் விழுந்துள்ளது என, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.