எர்ணாவூரில் சீறிப்பாயும் வாகனங்கள் வேகத்தடை இல்லாததால் சிக்கல்
திருவொற்றியூர்:வடசென்னை போக்குவரத்தின் பிரதானமாக எர்ணாவூர் மேம்பாலம் உள்ளது. மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் கன்டெய்னர் லாரிகள் உட்பட கனரக வாகனங்களுக்கு, பிரதானமாக இந்த மேம்பாலம் உள்ளது.இந்நிலையில், மேம்பாலத்தில் இருந்து, சுனாமி குடியிருப்பு - பாரத் நகர் சந்திப்பில் இறங்கும்போது, கனரக வாகனங்கள் அதிவேகத்தில் இறங்குகின்றன.இதன் காரணமாக, அங்கு சாலையை கடக்க முயற்சிக்கும் பாதசாரிகள், பைக், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.காரணம், இந்த சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், சிக்னல்கள், வேகத்தடை ஏதும் கிடையாது.மாறாக, போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், துறைமுகம் செல்ல வேண்டிய அவசரத்தில் கன்டெய்னர் லாரிகள், அதிவேகமாக மேம்பாலத்தை விட்டு இறங்குவது வாடிக்கையாக உள்ளது.இதன் காரணமாக, உயிர்பலி ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இந்த சந்திப்பில் வேகத்தடை அல்லது சிக்னல்கள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.