திலகர் நகர் குடியிருப்பு கிளீன் மாநகராட்சியினர் நடவடிக்கை
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, திலகர் நகரில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தரை தளத்துடன் நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்பில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்த கட்டடங்களின் பின்புறம் உள்ள காலி இடத்தை, குப்பை கொட்டும் இடமாக இவர்கள் பயன்படுத்துகின்றனர். இங்கு மலை போல் தேங்கிய குப்பையில் கழிவுநீர் கலந்து தேங்கி, கடும் துர்நாற்றம் வீசியது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த 4ம் தேதி, 'தண்டையார்பேட்டை குடியிருப்பில் டெங்கு, மலேரியா பரவும் அபாயம்' என்ற தலைப்பில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கவுன்சிலர் ரேணுகா, துப்புரவு ஆய்வாளர் மேற்பார்வையில், 10க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், திலகர் நகர் குடியிருப்பின் பின்புறம் தேங்கியிருந்த ஒரு டன் அளவிலான குப்பையை அகற்றினர். பின் அங்கு மருந்து தெளித்தும், 'பிளீச்சிங் பவுடர்' துாவியும் சுகாதார பணிகள் மேற்கொண்டனர்.