இருவரை கடத்தி ரூ.70 லட்சம் வழிப்பறி சிட்லப்பாக்கத்தில் துணிகரம்
சிட்லப்பாக்கம்,செம்பாக்கம், ஜெயேந்திர நகரைச் சேர்ந்தவர் சுஹேல் அகமது, 29. இவர், பாரிமுனை, பர்மா பஜாரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கியில், வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து, 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.அந்த பணத்துடன் சுஹேல் அகமது கடைக்கு சென்றார். பின், கடையில் வேலை செய்யும் ஆகாஷ், பிரவீன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து, வீட்டில் கொடுக்குமாறு கூறி அனுப்பினார். இருவரும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, மின்சார ரயிலில் ஏறி குரோம்பேட்டைக்கு வந்து இறங்கி, ராதா நகர், வீரபத்திரன் தெருவில் நடந்து சென்றனர்.அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கும்பல், அவர்களை வழிமறித்து, தாங்கள் சிட்லபாக்கம் போலீஸ் எனக்கூறி மிரட்டி, இருவரையும் அழைத்து சென்றனர்.தொடர்ந்து, 'இனோவா' காரில் ஏற்றி மேடவாக்கத்தில் ஆகாஷையும், பிரவீனை சோழிங்கநல்லுார் வரை சுற்றிவிட்டு மீண்டும் குரோம்பேட்டை ராதா நகரில் இறங்கிவிட்டு, பணத்துடன் தப்பினர்.மர்ம நபர்கள், பணத்தை பறித்து சென்றது குறித்து, சுேஹல் அகமது, சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிட்லப்பாக்கம் போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். இதில், சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ஸ்டாலின், அருண்குமார், ராம்குமார், மணிகண்டன் மற்றும் ராஜேந்திரகுமார் என்பது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து இன்னோவா மற்றும் கியா கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், வழிப்பறி செய்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.