சிலம்பு, மங்களூரு விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படுமா?
சென்னை, 'சிலம்பு, மங்களூரு விரைவு ரயில்களை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் இயக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, தாம்பரம் ரயில் முனையத்தில், பணிமனை மேம்பாட்டு பணி காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.பணிமனை மேம்பாட்டு பணி முடிந்துள்ளதால், விரைவு ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.எனினும், செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட சிலம்பு, மங்களூருக்கு இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படவில்லை. மாறாக, தாம்பரத்தில் இருந்து தான் தற்போதும் இயக்கப்படுகின்றன. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:மங்களூரு விரைவு ரயில், தாம்பரத்துக்கு அதிகாலை 3:00 மணிக்கே வந்து விடுகிறது. செங்கோட்டையில் இருந்து சிலம்பு விரைவு ரயிலும், காலை 4:25 மணிக்கே வருகிறது.இந்த ரயில்களில் வந்திறங்கும் வெளியூர் பயணியர், அவர்களின் இருப்பிடத்துக்கு செல்ல, மின்சார ரயிலில் பயணிக்க காத்திருக்க வேண்டியுள்ளது.போதிய மாநகர பேருந்துகளும் அந்த நேரத்தில் இயக்கப்படாததால், பயணியர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் அவதிப்படுகின்றனர்.'கால் டாக்சி'களில் குடும்பத்தோடு பயணிக்க, 1,000 ரூபாய் வரை கட்டணம் கேட்கின்றனர். எனவே, பயணியர் வசதியை கருத்தில் கொண்டு, மங்களூரு மற்றும் சிலம்பு விரைவு ரயில்களை, எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தாம்பரம் ரயில்வே பணிமனை மேம்பாட்டு பணி முடியும் நிலையில் இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் விரைவு ரயில்களின் இயக்கம் மாற்றம் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.