எச்சரிக்கையை மீறும் வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?
சென்னை, சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக, 20 இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு, அவ்விடங்களில் 'நோ-பார்க்கிங்' அறிவிப்பு பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஆனால், போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கையை மீறி, அதே இடத்தில் சாலையை ஆக்கிரமித்து, கார்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, சிம்சன் சிக்னல் அருகே நோ - பார்க்கிங் எச்சரிக்கை பலகை வைத்துள்ள இடத்திலேயே, சாலையை ஆக்கிரமித்து கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, போக்குவரத்திற்கு இடையூறாக, நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, 'தினசரி பிரத்யேக வாகனத்தில் சென்று, இடையூறாக நிறுத்தப்படும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.