பயணியர் வருகை குறைவு 10 விமானங்கள் ரத்து
சென்னை, பயணியர் வருகை குறைவு காரணமாக, சென்னையில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என, 10 விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7:45 மணிக்கு அந்தமான் செல்லும் 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' விமானம், காலை 11:20 மணிக்கு இலங்கை செல்லும் 'ஏர் இந்தியா' விமானம் ஆகியவை, திடீரென ரத்து செய்யப்பட்டன.அதேபோல், மதியம் 1:20 மணிக்கு, பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா விமானம், மதியம் 1:40 மணிக்கு பெங்களூரு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3:25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் என, ஐந்து புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.பெங்களூருவில் இருந்து, காலை 7:05 மணிக்கு, சென்னை வர வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானமும், மும்பையில் இருந்து மதியம் 12:05 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டன.அதேபோல், அந்தமானில் இருந்து மதியம் 1:00 மணி ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மதுரையில் இருந்து மதியம் 2:45 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், இலங்கையில் இருந்து மதியம் 3:40 மணிக்கு, சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் ஆகிய ஐந்து வருகை விமானங்கள், ரத்து செய்யப்பட்டன.விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய பயணியர் முன்பதிவு செய்யாததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.