ஏர்போர்ட்டில் தவறவிட்டது 21,770; திரும்ப பெற்றது 5,000 பொருள்தான்! மற்றதை ஏலம் விட்ட அதிகாரிகள்
சென்னை விமான நிலையத்தில் கடந்தாண்டு மட்டும், 21,770 பொருட்களை பயணியர் தவறவிட்டுள்ளனர்.விமான நிலையங்களுக்கு செல்வோர், விமான நிறுவனங்கள் அனுமதிக்கும் அளவில் மட்டுமே பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். முதன்முறையாக செல்வோர் விபரம் தெரியாமல்,அதிக பொருட்களை எடுத்துச் செல்வதும், சோதனையின்போது விபரம் தெரிவித்து, அதிகம் உள்ள பொருட்களை விட்டு செல்கின்றனர். சிலர் கவனக்குறைவில் பொருட்களை விட்டுச் செல்வதும் உண்டு. பயண அவசரத்தில், பதற்றத்திலும் பொருட்களை விட்டுச் செல்கின்றனர்.இவ்வாறு விடப்படும் பொருட்களை, பாதுகாப்பு சோதனை பகுதியில் பணியில் உள்ளோர் எடுத்து, பத்திரப்படுத்தி வைக்கின்றனர். பயணியர் மூன்று மாதங்களில் உரிய ஆவணங்களை காட்டி, மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். யாரும் பெறாத பொருட்கள் ஏலம் விடப்படும்.இந்த வகையில், சென்னை விமான நிலையத்தில், 2024ல் மட்டும் பயணியர், 21,770 பொருட்களை விட்டுச் சென்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளில், 39,539 பொருட்களை பயணியர் தவறவிட்டு உள்ளனர். இதில், 11,019 பொருட்களை மட்டுமே பயணியர் திரும்ப பெற்றுள்ளனர்.-- நமது நிருபர்-