இலவச கண் பரிசோதனை முகாம் சூளைமேடில் 250 பேருக்கு சிகிச்சை
சென்னை, சென்னை, சூளைமேடில் உள்ள லால்சந்த் மிலாப்சந்த் தாதா உயர் நிலைப்பள்ளியில், இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சைக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.அரிமா ரவிசந்திரன் - வித்யா தம்பதியின் நான்கு மாத பெண் குழந்தை சாருமதியின் கண்கள், 1994ம் ஆண்டு தானமாக வழங்கப்பட்டன. அதன் நினைவாக, தமிழக பிராஹ்மின் சங்கம் - சூளைமேடு 'தாம்ப்ராஸ்' இணைந்து, அரவிந்த் கண் மருத்துவமனை தலைமையில், இந்த முகாமை நடத்தின.இந்த இலவச சிறப்பு முகாமை, சூளைமேடு கவுன்சிலர் சுகன்யா செல்வம் துவக்கி வைத்தார். 'தாம்ப்ராஸ்' சென்னை மாவட்ட ஆலோசகர் வி.ஆர்.ஜி.ராஜி பங்கேற்றார்.அரவிந்த் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி திருவேங்கட கிருஷ்ணன், விழி திரை மருத்துவர் அனாஹித்தா ஆகியோர் பரிசோதனை செய்தனர்.இந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 'தாம்ப்ராஸ்' சூளைமேடு கிளையின் தலைவர் கணேஷ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில், 250க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். 90 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 10 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது.