புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் கொலையில் கள்ளக்காதலியின் தோழி உட்பட 3 பேர் கைது ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
அசோக் நகர்: அசோக் நகர் பகுதியில், கள்ளக்காதலியுடன் சொகுசு காரில் இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கள்ளக்காதலியின் கணவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர். சென்னை, அசோக் நகர் 4வது பிரதான சாலையில், பெண்ணுடன் நேற்று முன்தினம் மாலை காரில் இருந்த நபரை, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கும்பல், சரமாரியாக குத்தி தப்பியது. அவருடன் இருந்த பெண்ணும் தலைமறைவானார். படுகாயமடைந்த நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், உயிரிழந்த நபர் புதுச்சேரி, முதலியார்பேட்டை பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், 38, என, தெரியவந்தது. இவர், புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று, சொந்தமாக கழிவுநீர் அகற்றும் லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவே இந்த வழக்கு தொடர்பாக, வந்தவாசியைச் சேர்ந்த, கடலுார் போக்குவரத்துத் துறை ஊழியர் தனஞ்செழியன், 42, அவரது மனைவி சுகன்யா, 37 மற்றும் சுகன்யாவின் தோழி குணசுந்தரி, 27, என்பது தெரியவந்தது. விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட அம்பலமானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: பிரகாஷும், சுகன்யாவும் பள்ளி காலம் முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, சுகன்யாவை தனஞ்செழியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பின், தனஞ்செழியன் -- சுகன்யா தம்பதி, சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பிரகாஷ் - சுகன்யா இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுகன்யா கணவரை பிரிந்து, புதுச்சேரியில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், அரசு டெண்டர் தொடர்பான வேலை காரணமாக பிரகாஷ், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்துள்ளார். அவருடன் சுகன்யாவும் வந்துள்ளார். இந்த தகவல், சுகன்யாவின் தோழியான குணசுந்தரிக்கு தெரிய வந்துள்ளது. அசோக் நகர் 4வது பிரதான சாலையில் உள்ள கடையில், மூவரும் காபி அருந்தியுள்ளனர். அப்போது குணசுந்தரி, இந்த விபரத்தை சுகன்யாவின் கணவர் தனஞ்செழியனுக்கு தெரிவித்துள்ளார். மனைவி, கள்ளக்காதலனுடன் சென்னையில் இருப்பதை அறிந்த தனஞ்செழியன், உடனடியாக தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சென்று பிரகாஷை குத்திக் கொலை செய்துள்ளனர். பின், தனஞ்செழியன் தன் மனைவி சுகன்யாவை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.