செங்கை கயிறு இழுத்தல் போட்டி அனகாபுத்துார் அரசு பள்ளி முதலிடம்
சென்னை, செங்கல்பட்டு மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கயிறு இழுக்கும் போட்டி, நேற்று காலை நடந்தது. போட்டிகள், வண்டலுாரை அடுத்த ரத்தனமங்கலத்தில் நடந்தது.இதில், இரு பாலரிலும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள், கல்லுாரிகள் என, மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. இருபாலரிலும், 13, 15, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.மாணவர்கள், 13 வயது பிரிவில், பல்லாவரம், ஸ்டீபன் மெட்ரிக் பள்ளி முதலிடமும், மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி இரண்டாமிடமும் பிடித்தனர்.அதேபோல், 15 வயதில், தாம்பரம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி, நின்னக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின.அதேபோல், 17 வயது பிரிவில், அனகாபுத்துார் அரசு பள்ளி முதலிடத்தையும், மாம்பாக்கம் அரசு பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.அதேபோல், 19 வயது பிரிவில், தாகூர் பொறியியல் கல்லுாரி முதலிடத்தையும், அனகாபுத்துார் அரசு பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.மாணவியர் பிரிவில், 13 வயதில் தாம்பரம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி முதலிடமும், மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன.அதேபோல், 15 வயதில், மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி முதலிடமும், நின்னக்கரை ஊராட்சி ஒன்றிய பள்ளி இரண்டாமிடமும் வென்றன.மாணவியர் 17 வயது பிரிவில், அனகாபுத்துார் அரசு பள்ளி முதலிடத்தையும், மாம்பாக்கம் அரசு பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.அதேபோல், 19 வயது பிரிவில், தாகூர் கல்லுாரி முதலிடத்தையும், அனகாபுத்துார் அரசு பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தாம்பரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராஜேஸ் சர்தார் பரிசுகளை வழங்கினார்.