மேலும் செய்திகள்
விநாயகர் ஊர்வலம்; 31ல் போக்குவரத்து மாற்றம்
29-Aug-2025
சென்னை விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, கடந்த 27ம் தேதி ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பொது இடங்களில், விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டனர். அவற்றை, 31ம் தேதி, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், மீன்பிடி துறைமுகம் புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் வழித்தடம் மற்றும் கரைக்கும் இடங்கள்: * திருவல்லிக்கேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி வி.எம்., தெரு, லஸ் சந்திப்பு, அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை வலது புறம் திரும்பி, பீமண்ணா கார்டன் சந்திப்பு, சி.பி., ராமசாமி சாலை இடது புறம் திரும்பி செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ இடது புறம் திரும்பி ஆர்.கே.,மடம் சாலை வழியாக செல்லலாம். * அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.,மடம் சாலை, திருவேங்கடம் தெரு இடது புறம் திரும்பி வி.கே., அய்யர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயின்ட் மேரிஸ் சாலை, வலது புறம் திரும்பி, ஆர்.கே.மடம் சாலையில் இடது புறம் திரும்பி, தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் இடது புறம் திரும்பி, கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்., சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே., சாலை வழியாக செல்லலாம். * சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான் கான் சாலை வழியாக செல்லலாம். * சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை - காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச்., சந்திப்பை நோக்கி செல்லலாம். * சிலையை கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே கலங்கரை விளக்கத்தில் இருந்து ஸ்ரீனிவாசபுரம் சிலை கரைக்கும் இடத்திற்கு லுாப் சாலை வழியாக அனுமதிக்கப்படும். * விநாயகர் சிலையை கரைக்கும் இடங்களை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. 15,000 போலீசார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 1,519 சிலைகள், கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக, சென்னை முழுதும், 15,000 போலீசாரும், 2,000 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29-Aug-2025