குப்பையை தரம் பிரிக்க தி.நகரில் விழிப்புணர்வு
தி.நகர்:சென்னை மாநகராட்சி சார்பில், வீடுகளில் சேகரமாகும் குப்பையை மக்குபவை, மக்காதவை, அபாயகரமானவை என்று தரம் பிரித்த வழங்க, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வியபாரிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், இன்னும் பலர் குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்குவதில்லை. இதையடுத்து, குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தி.நகரில் நடந்த குப்பை தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை, தி.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி துவக்கி வைத்தார்.எம். எல்.ஏ., அலுவலகத்தில் துவங்கிய பேரணி, தி.நகர் ரங்கநாதன் தெரு, மேற்கு மாம்பலம் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றது.பேரணியில், கோடம்பாக்கம் மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற் பொறியாளர் இனியன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.