ஏலேல சிங்கருக்கு சிலை அமைக்க பாரதி பாசறை நிர்வாகிகள் தீர்மானம்
திருவொற்றியூர்: ''திருவள்ளுவர் கோவிலில், ஏலேல சிங்கருக்கு தனி சிலை அமைக்க வேண்டும்,'' என, பாரதி பாசறை நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். பாரதியாரின், 144வது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர், சண்முகனார் பூங்கா வளாகத்தில் உள்ள, அவரது மார்பளவு சிலைக்கு, பாரதி பாசறை நிறுவனர் மா.கி.ரமணன் தலைமையில், கடந்த 11ம் தேதி மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, திருவள்ளுவர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அக்கோவிலில், அவரது மாணவரான ஏலேல சிங்கருக்கு தனி சிலை அமைக்க வேண்டும். மாதவரம் - விம்கோ மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் திரளும் நிலையில், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் சரிவர செய்யவில்லை. அதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெருமழையிலும், ஆதிசேஷ தீர்த்தகுளம் நிரம்பவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாரதி பாசறை நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல, திருவொற்றியூர் நலச்சங்கம் சார்பில், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.