பிசூ விளையாட்டு போட்டிகள்: சென்னை பல்கலைக்கு 2 பதக்கம்
சென்னை சர்வதேச அளவில் நடந்த, 'பிசூ சாம்பியன்ஷிப்' தடகள விளையாட்டு போட்டி களில், சென்னை பல்கலைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச பல்கலைகள் விளையாட்டு கூட்டமைப்பான 'பிசூ' சார்பில், ஜெர்மனியின், ரைன் ரூர் நகரில், கடந்த மாதம் 17 முதல் 27ம் தேதி வரை, 'பிசூ சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், சென்னை பல்கலை உள்ளிட்ட பல்வேறு பல்கலைகளின் கீழ் செயல்படும் கல்லுாரிகளை சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். ஆடவருக்கான மும்முறை தாண்டும் போட்டியில், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில் மூன்றாமாண்டு பி.ஏ., தமிழ் படித்து வரும் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 20 கி.மீ., 'ரேஸ் வாக்' போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரியில், இரண்டாமாண்டு பி.ஏ., சமூகவியல் பயிலும் மஹிமா சவுத்ரி, வெண்கல பதக்கத்தை வென்றார். தமிழகம் சார்பில் பங்கேற்ற இருவரும் பதக்கங்களை பெற்று, சென்னை பல்கலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.