காவலர் குடியிருப்பில் வாலிபர் உடல் மீட்பு
சென்னை :ஆயிரம்விளக்கு, உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில், அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர். ஆயிரம்விளக்கில் உள்ள மேன்ஷன் சைட் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் முதல் மாடியில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த குடியிருப்பு மக்கள் சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் வாலிபர் உடல் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ஆயிரம்விளக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்த விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிப்ரதாஸ் மண்டல், 22 என்பது தெரிந்தது. அவர் காவலர் குடியிருப்பில் நடந்து வரும் கட்டட பணியில் ஈடுபட்டதும் தெரிந்தது. தற்கொலையா, மர்ம நபர்கள் கொன்று, துாக்கில் தொங்க விட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.