3வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி
ராயபுரம்,ராயபுரத்தில், வீட்டின் 3வது மாடியில் இருந்து மது அருந்திய கொத்தனார், தவறி விழுந்து பலியானார். பழைய வண்ணாரப்பேட்டை, சோமுசெட்டி ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ், 39; கொத்தனார். இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மனைவி, நேற்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊருக்கு சென்ற நிலையில், அவரது மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், பால்ராஜ் வீட்டின் 3வது மாடியில் இருந்து மது அருந்தியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து, தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. ராயபுரம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.