பைக் மீது பஸ் மோதி விபத்து காசிமேடில் சகோதரர்கள் பலி
காசிமேடு, காசிமேடில், இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திலீப், 26. தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காசிமேடு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக, இருசக்கர வாகனத்தில், தன் சித்தி மகன் மதன், 13, என்பவருடன் சென்றார். அப்போது, அதே வழியாக வந்த, திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற தடம் எண் '101' மாநகர பேருந்து, பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும், பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, மாநகர பேருந்து ஓட்டுநர் முனிரத்தினம், 46, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.