உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் பயணியர் நிழற்குடையை காணோம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பஸ் பயணியர் நிழற்குடையை காணோம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருமங்கலம் அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில் இருந்த பேருந்து பயணியர் நிழற்குடையை காணவில்லை என, பயணி ஒருவர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.திருமங்கலம் அருகில், அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில், 12வது பிரதான சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, பிராட்வே - அம்பத்துார், தி.நகர் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், தடம் எண் 47சி, 7எம், மற்றும் 147ஏ உள்ளிட்ட மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன. பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை, எவ்வித அறிவிப்புமின்றி அகற்றப்பட்டது. இதனால், கடும் வெயிலில் பயணியர் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற பயணி கூறிதாவது:திருமங்கலத்தில், 15 ஆண்டுகளுக்கு மேல் இருந்த 12வது பிரதான சாலை பயணியர் நிழற்குடை திடீரென காணவில்லை. இது குறித்து, நிழற்குடையை பராமரிக்கும் மாநகராட்சி அதிகாரிகளை கேட்டால், போலீசில் புகார் அளிக்கும்படி அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். அருகில் தனியார் கட்டுமான பணிக்காக அகற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நிழற்குடையில்லாமல் மக்கள் கோடை வெயிலில் தவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அகற்றப்பட்ட நிழற்குடையை, மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ