நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தங்கள் திருநீர்மலை சாலையில் பயணியர் அவதி
குரோம்பேட்டை, திருநீர்மலை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், நிழற்குடைகள் இல்லாததால் பயணியர் அவதிப்படுகின்றனர். பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில், பான்ட்ஸ் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, திருநீர்மலை சாலை. நாகல்கேணி, லட்சுமிபுரம், திருநீர்மலை, திருமுடிவாக்கம் வழியாக வெளிவட்ட சாலையை இணைப்பதால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அரசு பேருந்து மற்றும் நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் என, நாள்தோறும் ஏகப்பட்ட வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இதன் வழியாக, பல்லாவரம் - பழந்தண்டலம் இடையே, தடம் எண்: 55 ஏ, பிராட்வே - பழந்தண்டலம் இடையே 155ஏ, துர்கா நகர் - திருமுடிவாக்கம் இடையே, எஸ் 94 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநீர்மலை சாலை சந்திப்பு, நாகல்கேணி, லட்சுமிபுரம் - சரஸ்வதிபுரம் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், அப்பகுதி மக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காத்திருந்து, பேருந்துகளில் பயணிக்கின்றனர். ஆனால், இந்த இடங்களில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. அதனால், வெயில் மற்றும் மழை காலத்தில், ஒதுங்குவதற்கு கூட இடமின்றி பயணியர் தவிக்கின்றனர். சுப்புராயன் நகர் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை, சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. பயணியர் நிற்கும் போது உடைந்து விழுந்தால், பெரும் விபத்து ஏற்படும். அதனால், திருநீர்மலை சாலையில் காத்திருக்கும் பயணியரின் நலன் கருதி, நிழற்குடை இல்லாத இடங்களில் புதிய நிழற்குடை அமைக்கவும், மோசமான நிலையில் உள்ள நிழற்குடைகளை அகற்றி, புதிதாக மாற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.