உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறது

விதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறது

சென்னை : விதிமீறல் கட்டடங்களை, சீல் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அமலாக்கம் குறித்து, ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழுவின் கூட்டம், 13ம்தேதி நடைபெறவுள்ளது. இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்ட கட்டடங்களை, வரன்முறை செய்ய, சி.எம்.டி.ஏ., எடுக்கும் முயற்சிகள் குறித்தும், இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. சென்னையில், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு கூட்டம், ஜூலை 15ம் தேதி நடைபெற்றது. இதில், வரன்முறை செய்யக்கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, ஏற்கனவே இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்ட, 48 கட்டடங்களுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது.மேலும், விதிமீறல் கட்டடங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைக்கவும், கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது.

வரன்முறை செய்ய முயற்சி: இதில், 48 கட்டடங்களில், 11 கட்டடங்கள் வரன்முறை செய்ய தகுதி பெற்றுள்ளதாகவும், இவற்றை தவிர்த்து, மற்ற கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதில், தங்களுக்கு எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என, கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இதில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் சார்பில், கடந்த 26ம் தேதி வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில், 'இடிப்பு ஆணைக்குபின், சில விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த கண்காணிப்புக்குழு, 12 கட்டடங்களை வரன்முறை செய்ய இசைவு அளித்துள்ளது.

சில பகுதிகள், அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றாத மூன்று கட்டடங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மீதமுள்ள, ஒன்பது கட்டடங்கள் மீதான மேல் நடவடிக்கை குறித்து, கண்காணிப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டதில், எந்தெந்த கட்டடங்கள் எதன் அடிப்படையில், வரன்முறை செய்யப்படுகின்றன என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. கண்காணிப்புக்குழு கூட்டம்: இந்த நிலையில், கண்காணிப்புக் குழுவின் கூட்டம், வரும் 13ம்தேதி நடைபெறவுள்ளது. முந்தைய கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டன; எத்தனை கட்டடங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது; குறிப்பிட்ட சில கட்டடங்களை வரன்முறை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை; சிறப்பு அதிரடிப்படை அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து, ஆய்வு செய்யப்படும்.

இவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை, அறிக்கைதாக்கல் செய்யும். இந்த அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, இதன் மீது எடுக்கப்பட உள்ள மேல் நடவடிக்கை குறித்து, முடிவு செய்யப்படும்.ஆனால், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், 'கண்காணிப்புக் குழு முடிவுகள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை செப்., 12ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. கண்காணிப்புக்குழு கூட்டம், வரும் 13ம் தேதி நடைபெறுவதால், அதன் பின்னரே கோர்ட்டில் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வி.கிருஷ்ணமூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை