பொது வயிற்றுப்போக்கால் குழந்தை உயிரிழப்பு
வியாசர்பாடி, வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 30. இவரது மனைவி கிரேசி இன்பமணி, 25. இவர்களது ஒன்றரை வயது குழந்தை தமிழ்செல்வனுக்கு, நேற்று முன்தினம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, வீட்டருகே உள்ள ஆரம்ப பொது சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றனர். உடல் நிலை தேறாத நிலையில், மாலை பெரம்பூர் பி.பி., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நேற்று அதிகாலை குழந்தைக்கு மருந்து கொடுத்து துாங்க வைத்துள்ளனர்.இந்த நிலையில், நேற்று காலை குழந்தையை பார்த்தபோது, உடல் குளிர்ச்சியாக அசைவின்றி இருந்துள்ளது. உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.