உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்

சென்னை:சிங்கப்பூரில் இருந்து கம்போடியா வழியாக சென்னைக்கு, விமானத்தில் கடத்திவரப்பட்ட, 35 கோடி ரூபாய் மதிப்பிலான 'கோகைன்' போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னையில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 30 வயதுடைய வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு முரணாக பதில் அளித்தார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, 3.5 கிலோ எடையுள்ள கோகைன் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 35 கோடி ரூபாய். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர், சர்வேதேச போதை பொருள் கடத்தல் சிண்டிகேட் கும்பலில் தொடர்புடையவர் என்பதால், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆப்ரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால், இந்த பயணி, கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளார். அங்கிருந்து, சாதாரண சுற்றுலா பயணி போல சென்னை வந்து, கோகைன் போதைப் பொருளுடன் தப்ப முயன்று உள்ளார். இந்த கோகைனை பெற்றுக் கொள்ள விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த நபர் தப்பி ஓடி விட்டார். மும்பை மற்றும் டில்லியில் உள்ள சிலருக்கு சப்ளை செய்யவே, போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, சிக்கியவர் வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் அடிப்படையில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை