மகப்பேறு அட்டையில் காதலன் பெயர் பதிந்த கல்லுாரி மாணவிக்கு மிரட்டல்
ஓட்டேரி, மகப்பேறு அட்டையில், கணவர் பெயர் இடத்தில் காதலன் பெயரை குறிப்பிட்டதால், காதலன் மற்றும் அவரது குடும்பத்தார் கொலை மிரட்டல் விடுப்பதாக, இளம்பெண் புகார் அளித்துள்ளார். ஓட்டேரி அருகே நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த 22 வயது பெண், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகார் விபரம்: கல்லுாரியில் படித்து வரும் எனக்கும், சூளை அருகே ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தினேஷ், 25, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருந்தோம். இதனால் நான் கர்ப்பமானேன். ஆனால், திருமணம் செய்யக்கூறியபோது மறுத்து விட்டார். இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கர்ப்ப பரிசோதனைக்காக வீட்டருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய சென்றேன். குழந்தையின் தந்தையாக தினேஷ் பெயரை கூறினேன். இதை அறிந்த தினேஷ் மற்றும் அவரது பெற்றோர் என்னையும், என் பெற்றோரையும் அசிங்கமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர். மேலும், என்னையும், பிறக்கப்போகும் குழந்தையை பற்றியும் கேவலமாக பேசுகின்றனர். என் தாயையும் கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்களால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.