உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

சென்னை:ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில், 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில், சந்தியா வேடுல்லபள்ளி என்பவர், வீடு வாங்க, 2015ல் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, 2018ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணிகள் நடக்கவில்லை என தெரியவந்தது. இதனால், இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக சந்தியா வேடுல்லபள்ளி, கட்டுமான நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார். விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை. இதனால், குறிப்பிட்ட காலத்தில் மனுதாரருக்கு வீடு கிடைக்கவில்லை என்பது உறுதியாகிறது. இதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக, 3 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். அத்துடன் வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, 30 நாட்களுக்குள் இழப்பீடு தொகையை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை