பணியிடத்தில் கம்பி திருடிய கட்டட தொழிலாளி கைது
திருமங்கலம்: அண்ணாநகரில் கட்டுமான பணியிடத்தில், பழைய இரும்பு கம்பிகள் திருடிய கட்டுமான தொழிலாளி கைது செய்யப்பட்டார். அண்ணா நகர் 'எச் - பிளாக்' பகுதியில் நடக்கும் கட்டுமான பணியிடத்தில், பாலாஜி, 56, என்பவர், மேஸ்திரியாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அதே இடத்தில் தொழிலாளியாக பணிபுரிந்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தென்னவன்,33, என்பவர், பழைய இரும்பு கம்பிகளை திருடி தப்ப முயன்றார். ஊழியர்கள் சத்தம் போடவே, அங்கிருந்த மற்ற ஊழியர்கள் தென்னவனை கையும் களவுமாக பிடித்து, திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். மது அருந்துவதற்காக இரும்பு கம்பிகளை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.